Tuesday 13 December 2011

இடஒதுக்கீட்டிற்கான புதிய விதை


எழுதியவர்


இடஒதுக்கீட்டிற்கான புதிய விதை
சமீபத்தில் அ.மார்க்ஸ் அவர்களுடைய ‘சிறு பான்மையினர் தொடர்பான ஆணையங்கள் பரிந் துரைகள் குறித்த பரிசீலனைகள்’ என்னும் நூலைப் படிக்க நேரிட்டது. முதலில் இந்த நூலைப் பதிப்பித்த ‘முரண்’ பதிப்பகத் தோழர் கள் இயக்கன், புகழன் இருவருக்குமே என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரா சிரியர் அ.மார்க்ஸ் அவர்களுடைய எழுத்து மிகக் கடினமானது என்கிற எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த ‘மாயை’யினை இந்நூல் தகர்த்தெறிகிறது. இருபெரும் பிரச்சினைகளான இடஒதுக்கீடு, பாபர் மசூதி இடிப்பு இவையிரண்டையும் மிக ஆழமாக இந்நூல் விளக்குகிறது.
நூலுக்குள் காணப்படும் சில சுவாரசியமான பக்கங்கள்:
“1940ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ‘மகாத்மா காந்தி’ தனது பொதுக்கூட்டங்களிலும், தனி உரை யாடல்களிலும் எதிர்கால இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார். மத மாற்றங்களை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் மத மாற்றத் தடைச் சட்டம் என்கிற பேச்சு எழுந்த போது அதை எதிர்க்கிற முதல் நபராக அவரே விளங்கினார். மிகவும் ஆழமான மத உணர்வுடையவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் ஒரு மதச்சார்பற்ற அரசியல் சட்டம் உருவாவதற்கு அவரே காரணமாக இருந் துள்ளார்.
இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்வது பம்மாத்து வேலை என்கிற ஒரு குட்டு வைக்கிறார். அ.மார்க்ஸ். உதாரணத்திற்கு ‘சிறு பான்மையினருக்கு எதிராகப் பெரும்பான்மை மதத்தினரைத் திரட்டுவதற்கு மதம் மட்டுமின்றி வகுப்பு வன்முறைகளும் கூட இங்கே ஒரு வழி முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலவரங் களுக்குப் பின் உடனடியாக நடைபெறவுள்ள தேர்தல்களில் வன்முறைக்குக் காரணமான வலது இந்து அமைப்புகள் வெற்றி பெறுவது வாடிக்கை யாகிவிட்டது’ என்கிறார்.
அருணாசலபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங் களில் இந்து மதத்தில் இருந்து (கிறிஸ்துவ, முஸ்லிம்) அந்நிய மதங்களுக்கு மாறுவதை மட்டுமே தடை செய்கின்றன. பிற மதங்களில் இருந்து இந்து மதத்திற்குத் திரும்புவதைக் குற்ற மாக வரையறுப்பதில்லை. அதனைச் சட்ட பூர்வ மாக ஏற்கின்றன. எனவே இச்சட்டங்கள் மூலம் கிறிஸ்துவ, முஸ்லிம் மதப் பரப்பாளர்கள் மட் டுமே மிரட்டப்படுகின்றனர். இன்னொன்று, இன் னொரு பக்கம் தலித், பழங்குடி கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களாக மதம் மாறு கின்றனர். இதை அவர்கள் வீடு திரும்புதல் (கர் வாபசா) என அழைக்கின்றனர். அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமைகள் கிறிஸ்துவ, முஸ்லிம் தலித்களுக்கு மறுக்கப்படும் நிலையை வலதுசாரி இந்து அமைப்புகள் தமது மத மாற்ற நடவடிக்கைகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசுக்கும், மதத்திற்கும் எப்போதும் ஒரு நெருக்கமான உறவு இருந்து வருவதை நூலில் சுட்டிக் காட்டுகிறார் அ.மார்க்ஸ். ‘அரசு நடத்துகிற திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள்’ முதலியவற்றில் பூமி பூஜை போன்ற இந்து மதச் சடங்குகளுடன் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டன. தினந் தோறும் பள்ளிகளில் வந்தேமாதரம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மதச்சார்புடன் திரித்து எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் பாடத் திட்டங்களில் சேர்க்கப் பட்டுள்ளன. இதுபோன்ற பல விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது மதச்சார்பின்மை மரணித்து விட்டதாகக் கூறுகின்றார் அ.மார்க்ஸ்.
1871ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஹண்டர் கமிஷன் தொடங்கி தற்போதைய ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை வரை இடஒதுக்கீடு கோஷமிட்ட போதிலும் அரசு கொஞ்சங்கூடச் செவி சாய்க்கவில்லை என்பதை இந்நூல் தெளி வாகப் பல இடங்களில் முன் வைக்கிறது.
ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையில் வலி யுறுத்தப்படுகிற இடஒதுக்கீடு மிக முக்கியமான கோரிக்கை ஆகும். கோரிக்கை விவரம்:
சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக் கீட்டில் 10 சதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மீதமுள்ள 5 சதத்தை சிறுபான்மை யினருக்கு அளிக்கப்பட வேண்டும். சிறுபான்மை யினரில் 73 சதம் முஸ்லிம்கள் என்பதால்). இந்த இடஒதுக்கீட்டில் சிறிய மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட 10 சத இடங்களைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் இல்லையெனில் மிஞ்சுகிற காலி இடங்களைப் பிற சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு அளிக் கலாம். எக்காரணத்தைக் கொண்டும் ஒதுக்கப் பட்ட 15 சத இடங்களைப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கக்கூடாது. அதே சமயம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் கடைப்பிடிப்பது போலச் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் தம் தகுதி அடிப்படையில் மற்றவர் களுடன் போட்டியிட்டு (பொது ஒதுக்கீட்டில்) இடம் பெற்றால், இந்த 15 சதவீத இடஒதுக்கீட் டினை, அதில் அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே போலச் சிறுபான்மை யோர் நலனுக்காகச் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், மத்திய மாநில சிறுபான்மையோர் ஆணையங்கள் எல்லாம் சந்திக்கும் குவி மையங்களை எல்லா மாவட்டங்களிலும் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வல்லுநர்கள் அடங்கிய சிறுபான்மையோர் நலக்குழுக்களை உருவாக்க வேண்டும்.
“இதுபோலச் சிறுபான்மையோர் நலனுக்காக அமைக்கப்படும் குழுவிலாவது சிறுபான்மையின ருக்கு இடம் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஆணையங்கள் மீதான நம்பிக்கை பெருகும்.
‘விடியல் வெள்ளி’, ‘சமநிலைச் சமுதாயம்’ ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளியான கட்டு ரைகளைத் தொகுத்து நூலாக்கப்பட்டுள்ளது. பதிப்பகத்தாரின் முதல் முயற்சியாக இந்நூல் சொல்லப்பட்டாலும் ‘இடஒதுக்கீடு’ என்கிற ஒரு மாபெரும் போராட்டமிக்க விஷயத்தை அலசும் விதமாகக் கட்டுரைகளை நூலாகப் பிரசுரித்த ‘முரண்’ பதிப்பகத் தோழர்களைக் கை குலுக்கி எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடஒதுக்கீடு குறித்துப் பல்வேறு இடங்களில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வலியுறுத்தும் கோரிக்கைகள் வழியாக வைக்கப்படும் வாதங் களைப் பார்க்கும்போதும், தனிப்பட்ட சில வாதங் களை முன் வைக்கும் வேளையிலும் அ.மார்க்ஸ் ஒரு வழக்கறிஞராகக் காட்சியளிக்கிறார்.
72 பக்க சிறு நூலாக இருந்தாலும், இந்தி யாவில் சிறுபான்மையோர் மீது அரசு கவனம் செலுத்திடவும், எதிர்காலத்தில் சிறுபான்மை யோர் மீது அதிக அக்கறை காட்டுவதற்கு அரசுக்கு நல்வழிகாட்டியாகவும் இந்நூல் திகழும். அதற்கான தகுதி, அடையாளம் எல்லாமும் இருக்கிறது.
நூல்: சிறுபான்மையினர் தொடர்பான ஆணையங்கள் பரிந்துரைகள் குறித்த பரிசீலனைகள்
ஆசிரியர் : அ.மார்க்ஸ்
வெளியீடு : முரண் பதிப்பகம்
95/202, கால்வாய்க் கரை சாலை
இந்திரா நகர், அடையாறு
சென்னை - 600 020.

Friday 19 August 2011

மதங்கள் நமக்குத் தந்த (மிச்சம்) உச்சம்

“குஜராத் பயங்கரவாதத்தில் பெற்ற தாயும், தாலி கட்டிக் கொண்ட மனைவியும் முஸ்லிம் பெண்களைக் கற்பழித்து வரச்சொல்லி தன் மகனை, தன் கணவனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எப்போதும் துடித்து நிற்கும் ஆண்குறிகளுக்கு இதைவிட வேறென்ன பேரானந்தம் வேண்டும்?”


நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல
களந்தை பீர் முகம்மது

ஃபித்தௌஸ் ராஜகுமாரன் கொந்தளிப்பான சூழல்கொண்ட மண்ணில் வாழ்பவர். இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சொல்வதென்றால் பாசிசத்தின் குறியிலக்குகளில் அவரும் இருக்கக்கூடியவர். தமிழகத்தின் இதர முஸ்லிம் படைப்பாளிகளுக்கும் அவருக்குமான முககிய வேறுபாடு இது. எனவே, இந்தக் கதைகளை அவர் எழுதியே தீர வேண்டும். மதவாதம் வக்கரித்துப்போன சம்பவக் கொடூரங்களை இந்தக் கதைகள் படம்பிடித்துள்ளன. அவர் ஏற்கனவே எழுதிய கதைகளை அசைபோட்டவர்களுக்கு, இந்தக் கதைகளை ஏற்கின்ற மனப்பாங்கு வந்துவிடும்.

மதவாதமும் சாதீய வாதமும் நாம் விரும்பாத சுமைகள். ஆனால் எவனெவனோ அந்தச் சுமைகளை இழுத்து வந்து நம் தலைகளில் ஏற்றிவைத்து விடுகிறான்கள்; அவற்றைச் சுமக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள். விரும்பாத அந்தச் சுமைகளின் கீழே நாம் அமுங்கி விடுகிறோம். வாழ்வின் ஒரு பகுதியை, ஒரு நாளை, ஒரு மணி நேரத்தைத அல்லது சில நிமிசங்களையாவது மதவாதத்தின் பக்கம் நின்று கழித்தவர்களாக நாம் வெளியேறுகிறம்; அல்லது பிறர் பார்வைகளில் நாம் அவ்வாறு தென்படு விடுகிறோம்! எவ்வளவு அருவருப்பான வாழ்க்கை இது? என்னுடைய மதத்தின் மீது நானும் வெறிகொண்டவனாக இருப்பதற்கே, எதிர்மதத்தின் வெறியன் விரும்புகிறான். என்னைக் கொலை செய்வதற்கான நியாயமான காரங்களை, அவன் இந்தச் சாய்விலிருந்துதானே பெறமுடியும்?

குஜராத் பயங்கரவாதத்தில் பெற்ற தாயும், தாலி கட்டிக் கொண்ட மனைவியும் முஸ்லிம் பெண்களைக் கற்பழித்து வரச்சொல்லி தன் மகனை, தன் கணவனை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எப்போதும் துடித்து நிற்கும் ஆண்குறிகளுக்கு இதைவிட வேறென்ன பேரானந்தம் வேண்டும்? சிற்றின்பச் சாகரம்தான் ஆன்மீகப் பேரின்பத்தின் நுழைவாயில் என்பதை முகமூடியில்லாத நித்யானந்தா, பிரேமானந்தா சுவாமிகளைப் போல நிரூபித்திருக்கின்றது குஜராத். மதங்கள் நமக்குத் தந்த உச்சம் இதுதான். ஃபிர்தௌஸ் ஏன் இவற்றையெல்லாம் எழுதினார் என்பதற்கு இவைதாம் காரணம்.

‘நகரமே ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம்போல’ என்கிற தலைப்புக் கதைதான் தொகுப்பின் கடைசிக் கதை. மற்ற கதைகளின் தாங்கு சக்தியும் இதுதான். நம்முடைய உலகின் தார்மீகம் எவ்வளவு கோரமானது. நாம் அழிவின் விளிம்பில் ஓரம் சாய்ந்தவர்களாய் எப்படி ஒற்றைக்காலோடு நிற்கிறோம் என்பதை இந்தக் கதையை வாசிப்பதன் மூலம் புரிந்து கொள்கிறோம். விரக்தியின் மகா வெட்டவெளி அதன் சூன்யத்தைக் காட்டியே நம்மை அச்சுறுத்துகின்றது. அந்த வெறுமையை, நம்மை இழந்து நிற்கும் அந்த இருளைக் கச்சிதமாக வடித்திருக்கிறார் ராஜகுமாரன். இதயத்தின் மீதேறி நிற்கும் சுமையல்லவா?

கோவைக் கலவரச் சூழலைப் படைப்புகளுக்குக் கொண்டுவருவதில் ஆபத்தும் உள்ளது. இருதரப்பிற்கும் நடுவில் படைப்பாளி நிற்க வேண்டும். அதே சமயம் பலிபீடத்தில் பழி தீர்க்கப்படுகிற சமூகம் சார்ந்தவர், படைப்பின் வேகம் பித்துப் பிடித்த நிலையை எட்டிவிட்டால் அது தன்னுடைய கட்டுக்காவல்களை மீறிச் செல்லும். தன் சமூகத்தின் பிணங்களின் நெடி படைப்பின் மொழிவளத்தையும் கலைநயத்தையும் குதறிவிடலாகாது. ஃபிர்தௌஸ் தன்னை மிகவும் கட்டுப்படுத்தியிருக்கிறார்.

ஆன்மீகம் பற்றிப் பேசினால் அனைவருக்கும் மகிழ்ச்சியே. கூடுதலாக இரண்டொருமுறை கடவுளின் நாமத்தை உச்சரிக்க வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது. கோவில், குளம், தொழுகை, நோன்பு ஆகியவற்றோடு சம்மந்தப்பட்ட நபரை ஒழுக்கமுள்ளவராக, அன்புள்ளம் கொண்டவராக, அமைதிக்குப் பங்கம் தராதவராகக் கருதுவதுதான் மனித இயல்பு என்பதுபோல் ஆக்கிவைத்திருக்கிறோம். அதிலும் இந்தத் தன்மைகள் இளைஞர்களுக்கு இருக்குமென்றால் இன்னும் கொண்டாட்டம்தான். அதனால்தான் கோபாலனிடம் சொல்கிறார் ராவுத்தர், “இதென்ன இந்தத் தடவ பூரா இளவட்டங்களாவே தெரியுது. பசங்க திருந்திட்டாங்க போல”. அந்தத் திருந்திய பசங்கள்தான் மதக்கலவரத்தின் கர்த்தாக்கள். ராவுத்தரின் கடையே தீக்கிரையாகிவிடுகிறது. அரச மரத்தைக் கடையின் அருகில் நீரூற்றி வளர்த்தவர் ராவுத்தர். ஆனால், அதைக் கோயில் மரம் என்று சொந்தம் கொண்டாடுகிறது ஆன்மீக இளைஞர் கூட்டம். இந்த ஆன்மீக இளைஞர்கூட்டம் வைத்த நெருப்பில் இந்த அரச மரமும் - அதுதான் கோயில் மரமும் எரிந்து கருகுகிறது. இப்படித்தான் ஆகிவிடுகிறது ஆன்மீக வெறி! இத்தனை ஆண்டுகளாக இந்தக் கோயிலின் விசேசத்திற்காகவே டவுனிலிருந்து தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வருவாள் ராவுத்தரின் மகள் மும்தாஜ். இதை அவள் கணவன் ஜமால் கிண்டல் செய்யும்போது மும்தாஜ் சொல்கிறாள், “எங்க ஊர் கோயில் திருவிழாவ நா பாக்க வேண்டாமாக்கும்?” ஆன்மீக இளைஞர் கூட்டம் தீயிட்டது இந்த இனிய வாழ்க்கைக்கு!

நம் மனசாட்சிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவதுதான் ஃபிர்தௌஸின் வேலை. நீங்கள் எந்த இறைவனைத் தொழுகிறீர்கள் என்பதல்ல அவரின் கவலை. இந்தக் கதைகளை அணுகவேண்டிய முகவரி இதுதான். ஏராளமான வன்முறைகள், இலட்சக் கணக்கில் படுகொலைகள், இழப்புகள், நெருக்கடிகள், சர்வதேச அவமானங்கள், கண்டனங்கள் என நம்நாட்டைப் பாழாக்கும் இத்தனை இழிவுகள் நம்மைச் சூழும்போதும் நாடு மீண்டும் மீண்டும் அதனையே சந்தித்துக் கொண்டிருக்கிறதென்றால் என்ன அர்த்தம்? இந்த உள்ளுறைவைக் கண்டுபிடிக்கிற வேலை இலக்கியவாதிகளுக்கும் இருக்கிறது. அந்தப் பகுதியை அல்லது கடமையை நிறைவு செய்திருக்கிறார் ஃபிர்தௌஸ்.

மஹல்லாவாசிகளின் கதை ஒரு நாவலுக்கான களம். நிறைய சொல்ல இருக்கின்றது; கொஞ்சமாய்ச் சொல்லி இருக்கிறார். எல்லா ஜமாத்துகளிலும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது மொஹல்லாவாசிகளின் ஒற்றுமை எப்படிச் சீர் குலைகின்றது என்பதைக் காட்டும் கதை.  பெண்களின் மீதான ஒரு சிறு கட்டுக்கதை பேச்சுவாக்கில் உலாவந்தால், அது இன்னொரு பெண்ணின் வாழ்நாள் சோதனையாகி விடுகின்றது. திருமணம் முடிந்து சில நாள்களிலேயே அரபுநாட்டுக்குப் பறந்துபோன அம்சா ஒரு செல்போன் மூலம் தன் மனைவியை அதிகாரம் செய்கிறான். அவள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஏனெனில் ஊரில் கள்ள காஜாக்கள் இருக்கின்றார்கள்; அவர்கள் பெண்களைச் சூறையாடலாம். கதையின் ஆரம்பத்தில் தென்படுகிற தப்லீக் ஜமாத் - அதன் பெயரைச் சொன்னாலே தலைதெறிக்க ஓடுகிறார்கள்; பதுங்குகுழி தேடுகிறார்கள். எங்கள் ஊரில்தான் இந்த ஓட்டம் என்றிருந்தேன்; ஊர் ஊராக இந்தக் கதைதானோ? ஏன் இப்படி ஓடுகிறார்கள் என்பதை தப்லீக் ஜமாத்தார் இன்னும் அறிந்து கொள்ளவில்லை; அதே சமயத்தில் பொது விவகாரங்களில் தப்லீக் ஜமாத்துகளின் பங்களிப்பே இல்லை. அதை இந்தக் கதை குத்திக் காட்டுகிறது. மஹல்லாவின் அசலான மொழி வாசிப்புச் சுவையைக் கொடுக்கின்றது.

முஸ்தபா கமால்பாட்ஷா ஓர் இளம்படைப்பாளி. ஆனால் அது இந்த நாட்டின் கௌரவத்திற்கு உள்ளானதல்ல. அவன் பெயரும் தாடியுமே இங்கு பெரும் பதற்றத்தைத் தருகின்றன. அவனும் போலீஸாரின் கழுகுக் கண்களுக்கும் எள்ளல்களுக்கும் ஆளாகிறான். அவன் இருப்பு ஓர் அபாயம். அவன் மீண்டுவிட்டாலும்கூட அந்த அவமரியாதை சூழ்ந்துவிட்டதே! அதுதான் அவன் கொதிப்புக்குக் காரணம். நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளைப் போட்டு உடைத்துவிட்டு ஏதேச்சாதிகாரப் பாதையில் போகின்றது இன்றைய அதிகார வர்க்கம்; ஓர் இலக்கியவாதியாக இதை அவன் உணர்வதால்தான, “சமூக ஜனநாயக சக்திகள் மிகப் பலவீனமடைந்திருக்கின்றன. அல்லது வெற்றுக் கூச்சல் போட்டுக்கொண்டு மிகவும் பின்தங்கியிருக்கின்றன... அதுதான் நிலைமை மிகமோசமாக இருக்கிறது” என்று தெளிவாகப் பேசமுடிகிறது அவனால். ஆனால் இதே சூழ்நிலையில் சிக்கிக்கொள்கிற ஒரு பாமர இறை பக்தியாளரால் என்ன அநுமானிக்க முடிகிறது. “துனியா அழியறதுக்கு நாளாயிருச்சு! அதன் அடையாளங்கதா இது...” (பக்,86) இப்படிப் பேசித்தான் சமூகமும் தன் அழிவுக்குப் பின்புலக் காரணமாக உள்ளது.

ராஜகுமாரனின் இந்தக் கதைகளைப் படிக்கக்கூடிய வாசகர்களும இந்த இரண்டும் பார்வைகளுக்குள்தான் இருப்பார்கள்; அவர்கள் முதல் பார்வையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு இன்னொன்றையும் சொல்லாமல்போனால் எப்படி? இரண்டு கதைகள் தவிர பாக்கியுள்ள நான்கு கதைகளுமே முஸ்லிம்களால் நடத்தப்படாத கணையாழி மற்றும் யுகமாயினி இதழ்களில் பிரசுரமானவையென்பதும், முஸ்லிமல்லாத பதிப்பகமே இதை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது என்பதுமே அந்த முக்கியச் செய்தி.

நன்றி: உயிர் எழுத்து, ஆகஸ்ட் 2011

Tuesday 22 March 2011

புத்தகங்கள் கிடைக்குமிடங்கள்

சென்னை:
நியு புக் லேண்ட்ஸ் - 044 28156006,
பாரதி புத்தகாலயம் - 044 24332924,
கீழைக்காற்று வெளியீட்டகம் - 044 28412367,
இலக்கியச் சோலை - 044 25610969,
சாஜிதா புக் சென்டர் - 99411 75303
புலம் வெளியீடு - 9840603499
பயணி - 9445124576

மதுரை: பாரதி புத்தகாலயம் - 0452 2324674,
அஹத் பப்ளிஷர்ஸ் - 93450 55666

கோவை: விடியல் பதிப்பகம் - 0422 2576772

பொள்ளாச்சி: எதிர் வெளியீடு - 98650 05084

மற்றும் பிற முன்னணி விற்பனையகங்களில்

Sunday 20 March 2011

என்ன நடக்குது மத்திய கிழக்கில்?


சோறு சுதந்திரம் சுயமரியாதை

துனீசியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன் என மக்கள் எழுச்சி தொடர்கிறது.
வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வீற்றிருந்த சர்வாதிகாரிகள் ஒவ்வொருவராக ஆட்சிப் பீடத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள்.

ஒரு புறம் இராணுவம் எல்லா வகையான ஆயுதங்களையும் பிரயோகிக்கத் தயாராக நிற்க, மறுபுறம் இளைஞர்களும் யுவதிகளும் சாலைகளில் நிரம்பி ஆயுதம் எதுவும் இல்லாமல் அறப்போராட்டம் நடத்தி அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர். பயங்கரவாதத்தின் பெயரில் வல்லாதிக்க அரசுகள் மக்களைக் கொன்று குவித்து வரும் வேலையில் ஆயுதமின்றி போராடும் இந்த நவீன காந்தியவாதிகளின் உந்துசக்தியாக அமைந்தது என்ன?

கணிப்பொறியின் விசைப்பலகையை மட்டுமே நவீன ஆயுதமாக நம்பிய இந்த திடீர் கிளர்ச்சியை பின்நவீனத்துவ எழுச்சி என்று சுட்ட முடியுமா?

மையப்படுத்தப்பட்ட அமைப்பு, தலைமை, வரையறுக்கப்பட்ட செயல்திட்டம் இவை எதுவும் இல்லாமல் வீதிகளில் திரண்ட இந்தப் பெருந்திரள் மக்கள் போராட்டத்தை புரட்சி என்று அழைக்க முடியுமா?

என்ன நடக்குது மத்திய கிழக்கில்?




நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்


இடம்: மாவட்ட மைய நூலகம் சிற்றரங்கம் (LLA பில்டிங்)


நாள்: 01.04.2011


நேரம்: மாலை 6 மணி முதல் 9 மணி வரை.


பங்குபெறுவோர்:



முனைவர் மணிவண்ணன்,
பேரா. அரசியல் அறிவியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.


துரைசிங்கவேல்,
ஆசிரியர், புதிய போராளி.


எஸ்.எம். ரஃபீக் அஹமது,
மாநிலப் பொதுச் செயலாளர், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI)


சு.பொ. அகத்தியலிங்கம்,
ஆசிரியர், தீக்கதிர்.

இவர்களுடன்பேரா. அ. மார்க்ஸ்.

Friday 18 March 2011

வளர்ச்சி - இடப்பெயர்வு - மறுவாழ்வு



வளர்ச்சிக்கும் அடிப்படை உரிமைகளுக்குமான முரண் தற்போது உலகில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பெரிய அளவில் இன்று நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையை உலகத் தரமான ‘சிங்காரச் சென்னை’யாக மாற்றும் முயற்சியில் குடிசை மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்கிற பெயரில் வீடற்றோர் கட்டாயமாக அகற்றப்படுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகளைச் சட்டப்புர்வமாக்கும் திட்டத்துடன் இந்திய அரசு நிலப்பறிப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக புதிய கொள்கை அறிவிப்பு, புதிய சட்டம் இயற்றுதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை குறித்த நுண்மையான ஆய்வாக அமைந்துள்ளது இந்நூல்.

நூல்: “சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்”
ஆசிரியர்: அ. மார்க்ஸ்.
விலை : ரூ. 45

Tuesday 15 March 2011

வன்முறை / எதிர்வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...


பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு முன் / பின் என இடைக்கோடிட்ட சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில், தமிழகம் குறித்து கட்டமைக்கப்பட்ட அமைதிப் பூங்கா என்ற சித்திரம், கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளால் கலைத்துப் போடப்பட்ட பின்னணியில், அங்கு வாழும் இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார வாழ்வினூடாக வகுப்புவாதத்தின் மூலாதாரத்தையும், வன்முறை மற்றும் எதிர்வன்முறைச் செயல்பாடுகளின் பாதிப்புக் கோரங்களையும் தன்னுடைய மின்னல் எழுத்துக்களால் நெடுங்கதைகளாக... மிர்ஸா காலிபின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலின் வழியாக நம் கண்கள் பனிக்கச் செய்கிறார் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரு குறுநாவல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் கதைத் தொகுப்பு நூல் இது.

இந்நூலுக்கு தோழர். ஆதவன் தீட்சண்யா எழுதிய முன்னுரையை இங்கே சென்று படிக்கலாம். அதனை இங்கும் பதிந்துள்ளோம்.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் தமிழில்

இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் (1871) தொடங்கி இன்றைய ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் வரை வழங்கியுள்ள பரிந்துரைகள் முதன் முதலாகத் தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.
வகுப்புவாதம் X  மதச்சார்பின்மை குறித்து இந்திய அளவில் நடைபெறும் விவாதங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஆழமாக இந்த அம்சங்களைத் தொட்டுச் செல்கிறது.

பயங்கரவாதம் இந்திய அரசு காவல்துறை


இன்றைய உலகு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்னை பயங்கரவாதம். எத்தகைய அரசியல் நியாயங்கள் இருந்தபோதும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நாம் ஏற்க முடியாது. எனில் பயங்கரவாதத்தை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது? காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் அபரிமிதமான அதிகாரங்களை வழங்குவது, கருப்புச் சட்டங்களை இயற்றுவது, மனித உரிமைகளை மீறுவதன் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர இயலாது. அரசியல் தீர்வு ஒன்றே வழி என்கிறார் அ. மார்க்ஸ்.

Monday 14 March 2011

தினமணி நூல் அரங்கில் முரண் பதிப்பகம்

இன்று 14/03/2011 தினமணி நாளிதழில் 14ம் பக்கத்தில் நூல் அரங்கம் பகுதியில் முரண் பதிப்பகத்தின் வெளியீடான “சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்” என்ற நூல் இடம் பெற்றுள்ளது.

தினமணிக்கு நன்றி!

முற்றுகையிடப்பட்ட மனதின் தத்தளிப்பு



ஃபிர்தவுஸ் ராஜகுமாரனின் ‘‘நகரமே ஓநாய்கள் ஊலையிடும் பாலைவனம் போல’’ சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை

வெளியீடு:
முரண்
95/202 கால்வாய்க்கரை சாலை
இந்திரா நகர்
அடையாறு, சென்னை- 20

muran@live.com
9500075795
1.

நடிப்பு என்பது நடிகரின் திறமைகளைக் காட்டுவதல்ல, அது திறமைகளின் வழியே வாழ்க்கையைக் காட்டுவது என்பார் பேரா.சே.ராமாநுஜம். இவ்வரையறை எழுத்துக்கும் பொருந்தும் என்கின்றன ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனின் கதைகள்.

திடீர் திருப்பங்களும் திகிலூட்டும் கொண்டையூசி வளைவுகளும் கொண்ட மலைப்பாதைக் கதைகள் எதுவும் இத்தொகுப்பில் இல்லை என்பது ஆறுதலானதுதான். மொழியைத் திருகி நம் முழியையும் பிதுக்கும் பம்மாத்துகளின்றி மிக நேரடியாக வாழ்வைப் பேசுவனவாக இக்கதைகள் அமைந்திருப்பது தற்செயலானதல்ல. சுயமரியாதைக்கு பங்கம் நேராமல் ஒவ்வொரு நொடியைக் கடப்பதுமே இடர்ப்பாடு மிக்கதாய் மாறிவிட்டச் சூழலுக்குள் பொருந்த முடியாது தத்தளிக்கும் ஒரு மனம் இப்படியாகத்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதாகவே உணர்கிறேன். தீவிர மன அழுத்தத்தில் உறைந்து பேச்சுமூச்சற்றுக் கிடப்பதும் ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தை இனி அடைத்துவைக்கவியலாதென வாய்விட்டுக் கதறித் தீர்ப்பதும் ஒரேவகையான வெளிப்பாட்டு வடிவத்தின் வெவ்வேறு நிலைகள்.

ஆனால் இப்படி அச்சுஅசலான வாழ்வைச் சொல்லிப்போவதில் உள்ள ஒருவகையான மொன்னைத்தனம் தன்கதைகளுக்குள் படிந்துவிடாமல் லாவகமாக கடப்பதினால்தான் ஃபிர்தவுஸ் என்கிற ஒரு கதைக்காரன் நமக்கு கிடைத்திருக்கிறார். புதுமைப்பித்தன் சொல்வதுபோல சமூகத்திற்கும் தனிமனிதருக்கும் உள்ள தொடர்பை தொடர்பின்மையை கண்டுரைக்கும் மனிதக்கண் அவருக்கு வாய்த்திருக்கிறது. அது எப்போதும் தன்னைச் சுற்றியான நிகழ்வுகளை உள்ளார்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறது. நீங்களும் நானும் பார்க்கத்தவறிய/ பார்த்தாலும் உள்வாங்காது கடந்துபோகிற/ இயல்பானவையென ஏற்றுக் கொண்டிருப்பவற்றில் உள்ள முரண்களை/ உண்மை என்று நம்பியிருப்பவற்றில் மறைந்திருக்கும் கபடங்களையெல்லாம் பார்த்தறிய இந்த மனிதக்கண்ணே ஃபிர்தவுசை வழிநடத்தியிருக்கிறது. அதனால், அவர் தன் சொந்த சமூகத்தின் மீது கட்டவிழ்த்தவிடப்பட்டுள்ள அவதூறுகள், தாக்குதல்கள் பற்றி மட்டுமல்லாது ஒரு மதம் என்கிற நிலையில் இஸ்லாத்துக்குள் நிகழவேண்டிய மாற்றங்கள், பெண்களைப் பற்றிய பார்வையில் உள்ள குறைபாடுகள் குறித்த விவாதங்களைக் கிளப்பி நம் கவனத்தை ஈர்ப்பவராயிருக்கிறார். ஆகவே, மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஒரு இஸ்லாமியருக்கு காட்டப்படுகிற சலுகை மனப்பான்மையிலோ பச்சாதாபவுணர்விலோ வேறுவகையான முன்முடிவுகளின்படியாகவோ இக்கதைகளை அணுகி யாரும் அவரை அவமதித்துவிட வேண்டாம் என்று சற்றும் அன்பில்லாமல் கேட்டுக்கொள்கிறேன்.

2.

இத்தொகுப்பிலுள்ள கதைகளின் கட்டமைப்பு, மொழிப்பிரயோகம், கலைத்தன்மை, கதாபாத்திரங்களின் உருவாக்கம், காலஒழுங்கு, எடுப்பு-தொடுப்பு- முடிப்பு போன்ற நுட்பங்களையெல்லாம் நுண்மான் நுழைபுலம்மிக்கப் பண்டிதர் எவரேனும் பார்த்தோ படித்தோ மதிப்பெண் வழங்கக்கூடும். ஆனால் இப்படியான சங்கதிகள் ஏனோ என்னை எப்போதும் ஈர்த்ததேயில்லை. எனக்குள்ள பிரச்னை, இந்தக் கதைகள் எதைப் பேசுகின்றன அல்லது பேச மறுக்கின்றன என்பதுதான்.

கோயம்புத்தூரின் கோட்டைமேடுப் பகுதியில் ஓரளவுக்கு செரிந்து வாழும் இஸ்லாமியர்கள் தான் கதைமாந்தர்கள். பாப்ரி மசூதி இடிப்புக்கு முன்னும் பின்னுமாக இஸ்லாமியருக்கு ஏற்பட்ட உளவியல் நெருக்கடிகளும் அதை அவர்கள் எதிர்கொண்ட விதமும் எதிர்கொள்ள முடியாமல் திணறிப்பெற்ற துயரங்களுமே கதைகளாக விரிந்துள்ளன.

ஃபிர்தவுஸ் எழுதுவதற்கு தேர்ந்துகொண்ட மூலகங்கள் எனக்கும் தெரிந்துதானிருந்தன. ஆனால் அவற்றைக் கச்சாவாகக்கொண்டு ஏதாயினும் எழுதியிருக்கிறேனா என்று யோசிக்கிறேன். ம்ஹூம்... ஒற்றைவரிகூட இல்லை. ஏனிப்படி? எழுத முடியாமல் என்னைத் எடுத்தது எது? அப்படியானால் எனது அக்கறைகள் எது சார்ந்தவை? சமூகம்/ மக்கள் என்ற பொதுத்தலைப்புகள் குறித்த எனது மனப்பதிவில் இஸ்லாமியர்கள் விலக்கிவைக்கப்பட்டுள்ளனரா? இஸ்லாமியத் துவேஷம் கொண்ட யாதொரு மதவாத அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்காத நான் ஏன் இஸ்லாமியர் மீதான வன்செயல்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக எதையும் எழுதவில்லை? இத்தொகுப்பின் கடைசிக்கதையில் தேமே என்று நிற்கிற ஒருவனை வலிய சண்டையிழுத்து இன்னொருவன் தாக்கும்போதும் ஏனென்று கேட்காமல் பேருந்துக்காக காத்திருக்கும் மூவரில் நானும் ஒருவனா? மதநம்பிக்கை கொண்ட இருதரப்புக்குள் நடக்கிற சண்டையில் மதநம்பிக்கையற்ற எனக்கொரு வேலையும் இல்லை என்று காரணம் கற்பித்துக்கொண்டு நடுநிலைவகிக்கும் மனநிலைக்கு ஆட்பட்டுவிட்டேனா? உண்மையில் நடுநிலை என்று ஒன்று இருக்கிறதா? இரண்டு ஆதிக்கவாதிகளுக்குள் சண்டை என்றால் அடித்துக் கொள்ளட்டும் என்று வேடிக்கைப் பார்க்கலாம், விசிலடித்தும் ரசிக்கலாம். இங்கு அதுவல்லவே நிலைமை. எனில், ஒடுக்குகிறவர்களையும் ஒடுக்கப்படுவர்களையும் ஒரேநிறையில் வைத்து அளவிடுகிற கள்ளத் தராசாக எப்போது மாறியது என்மனம்? ஒருவேளை, மதச்சார்பற்ற உடலும் இந்துத்துவ மனமும் கொண்டு மனிதன் பாதி மிருகம் மீதி என்றாகிவிட்டேனோ? நாட்டை யார் ஆண்டாலும் மக்களின் மனதை ஆளப்போவது நாங்களே என அத்வானி கொக்கரிப்பதன் பின்னுள்ள சூட்சுமம் இதுதான் போலும். இந்தச் சமூகம் மதவாதத்தால் முற்றுகையிடப்படும் அபாயத்தையும் அது உருவாக்கக்கூடிய பாரதூரமான கேடுகளையும் உணர்ந்தவர்களும்கூட செயலற்றுக் கிடப்பதால் உத்வேகம் பெற்றுதான் அத்வானி போன்றவர்களால் இவ்வளவு அகங்காரமாக பேசமுடிகிறது.

முதலில் அவர்கள் ராமனை ஆதியந்தமில்லாத கடவுள் என்றார்கள். பிறகு, பிறப்பும் இறப்புமில்லாத அந்தக் கடவுள் குறிப்பிட்ட சர்வே எண்ணுள்ள இதோ இந்த இடத்தில்தான் பிறந்தார் என்றும் புளுகினார்கள். ‘‘... நம் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட எந்த வழிபாட்டுத்தலத்தையும் சேதப்படுத்தாதே. மக்கள் மன்னரை மனதார வாழ்த்தி மகிழும்படி நீ ஆட்சி செய். உன் நிர்வாகத்தால் அத்தகைய உறவை ஏற்படுத்திக்கொள். இஸ்லாம் தனது நற்குணங்களால் வளரும். அது பேரச்சத்தால் வளராது...’’ என்று தன் மகன் ஹூமாயுனுக்கு உயில் மூலம் ( ராம் புனியானி, தலித் முரசு- செப்2008 ) அறிவுறுத்திய பாபர் மீது அவர்கள் பல அபாண்டங்களை சுமத்தினார்கள். ராமன் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்து நிரவி அதன்மீதே பாப்ரி மசூதி கட்டப்பட்டது என்கிற பொய்யை அவர்கள் திரும்பத்திரும்பக் கூறிவந்தார்கள்.

அவர்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்க வரலாறு ஆயிரம் உண்மைகளை தன்னுள் வைத்திருக்கிறது. ஆனால் அந்த உண்மைகளை புரிகிற மொழியில் சொல்லி மக்களைத் திரட்ட வேண்டிய சக்திகள் ஐம்பது பேர் படிக்கிற தனிச்சுற்று பத்திரிகைகளில் எழுதினார்கள் அல்லது ஒத்தக் கருத்துள்ளவர்கள் நிறைந்த பாதுகாப்பான அரங்குகளில் ரகசியம்போல் பேசி திருப்திகண்டார்கள். மறுபக்கத்திலோ இந்துபயங்கரவாதிகள் களத்திலே இறங்கி மக்களைத் திரட்டிக் கொண்டிருந்தார்கள். அயோத்தியில் செங்கல் சூளையே இல்லை என்பது போல ராமனுக்கு கோவில் கட்ட வீட்டுக்கொரு செங்கல் கேட்டு வெகுமக்களை தமது திட்டத்தில் பங்கெடுக்க வைத்தார்கள். அவரவர் ஊருக்கே திசைதெரியாத மக்களை அயோத்தி இருக்கும் திசை பார்த்து(?) வணங்கச் சொல்லி திரட்டினார்கள். விளக்குப்பூஜையின் பெயரால் பெண்களையும், வானரசேனை என்ற பெயரில் வில் அம்புகளோடு பழங்குடிகளையும் அணிதிரட்டியிருந்தார்கள். முதல் செங்கல்லை வைத்து ராமன்கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பொறுப்பை பீகாரைச் சேர்ந்த ராமேச்வர் சௌபால் என்கிற தலித்துக்கு வழங்கியதன் மூலம் அவர்கள் தலித்துகளுக்கும் குறிவைத்தார்கள்.

இப்படி, இந்துத்துவத்திற்கு எதிரான அணியின் இயல்பான கூட்டாளிகளாக இருந்திருக்க வேண்டிய சக்திகளையெல்லாம் அவர்கள் தமது பயங்கரவாத நிகழ்ச்சிநிரலின் கீழ் திரட்டிவிட்டிருந்தனர் என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மக்களிடம் இயல்பாகக் காணப்படுகிற கடவுள் நம்பிக்கையை இன்னொரு மதத்தாருக்கு எதிரானதாக கட்டமைப்பதில் அவர்களுக்கு தடையேதும் இருக்கவில்லை. இந்தியாவை இந்துமயமாக்கு- இந்துவை ராணுவமயமாக்கு என்ற தமது திட்டத்தில் சங்பரிவாரத்தினர் அச்சமூட்டும் வகையில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆம் அவர்கள் மக்களின் கைகளில் கொலையாயுதங்களைக் கொடுத்தார்கள். நாடெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களின் இலக்காயின இஸ்லாமியர்களது சுயமரியாதையும் உயிரும் உடைமைகளும்.

வெறியேற்றப்பட்ட கொலை மிருகங்கள் எந்தநேரத்திலும் தன்மீது பாயக் கூடும் என்ற அச்சுறுத்தலால் முற்றுகையிடப்பட்ட மனதோடு ஒவ்வொரு இஸ்லாமியரும் தத்தளித்துக்கொண்டிருந்தபோது அறிவுஜீவிகள் என்ற கற்பிதத்தில் ஆட்டுதாடி வளர்த்துக்கொண்டிருந்த நானும் என்னொத்த நண்பர்களும் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கையில் வெட்கமாயிருக்கிறது. ‘ரத்த யாத்திரையான ரதயாத்திரை’ என்பது மாதிரியான வார்த்தை விளையாட்டுகளை மதவெறி எதிர்ப்பு பிரச்சார வாசகம் என்று சீரியஸாக நம்பிக்கொண்டு சுவரொட்டிகளாக்கி ஒட்டினோம். இந்தியாவில் மூன்றே மூன்று மதங்கள் மட்டுமே இருப்பதான நினைப்பில் கோவில் மசூதி சர்ச் மூன்றையும் ஒன்றையொன்று உரசியபடி தட்டிகளில் வரைந்து தள்ளினோம். சாத்தியமான இடங்களில் மும்மதங்களின் பெரியவர்கள் கைகோர்த்து செல்லும்படியான மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினோம். சாத்தியமில்லாத இடங்களில் மாறுவேடப்போட்டியில் பங்கேற்பவர்களைப் போல நாங்களே மும்மதப் பெரியவர்களாக வேடமணிந்து ஊர்வலம் வந்தோம். இலக்கியவாதிகள் பேனாவைவிடவும் பெரிதென நம்பி வைத்திருந்த ஜிப்பாக்கள் பாதிரியின் அங்கியாகவும் இஸ்லாமியப் பெரியவரின் மேலாடையாகவும் இயல்பாகப் பொருந்தின. சற்றே சிவந்த உடல்வாகு கொண்ட ஒருவருக்கு பூணூலை அணிவித்து இவர்தான் இந்து என்று சித்தரிப்பதில் எங்களுக்கு ஒரு குழப்பமும் வரவில்லை. அப்படியிருப்பவர்தான் இந்து என்பதில் அன்றைக்கிருந்த தெளிவு பின்னாளில் மங்கிப்போன துயரத்தை எங்கு கொண்டுபோய் ஆற்ற?

ஆனால் இப்படியான முயற்சிகள் எதுவும் இந்துத்துவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் குறுக்கீடுகளாக அமையவில்லை. பன்முகத்தன்மை கொண்டதொரு சமூகமாக இணங்கி வாழும் பண்பை தக்கவைத்துக் கொள்வதற்கான மக்களது மனசாட்சியை உலுக்கியெழுப்பும் உக்கிரமோ சமூகத்தைக் கூறுபோடும் மதவாதத்தை தனிமைப்படுத்தும் ஆற்றலோ அவற்றுக்கு இல்லை. அடையாளப்பூர்வமான எதிர்ப்பாக குறுகிப் போகுமளவுக்கு உள்ளீடற்று இருந்தன. எனவே இந்துபயங்கரவாதிகளின் கொடிய வன்முறைகளை தன்னந்தனியாய் எதிர்கொண்டாக வேண்டிய இக்கட்டில் தள்ளப்பட்டனர் இஸ்லாமியர்கள். ஹெலிகாப்டரில் பறந்து வெள்ளச்சேதத்தைப் பார்வையிடும் ஆட்சியாளர்களைப் போல கலவரங்கள் நடந்து முடிந்த பிறகு இழவு வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்தவர்களின் சடங்கார்த்தமான நடவடிக்கைகள் இழந்த எதையும் திருப்பித்தரவில்லை. உடுக்கை இழந்தவர் கையாக நீண்டு அரவணைத்துக்கொள்ள ஒருவருமற்ற கையறுநிலையில் தானும் தன் சமூகமும் அவலத்தின் பெருஞ்சுழிக்குள் சிக்கித் திணறிய அந்த காலகட்டத்தின் அலைக்கழிப்பை அதன் சூட்டுக்குள் புகுந்து எழுதியிருக்கிறார் ஃபிர்தவுஸ்.

எந்தக் கலவரமும் திடுமென ஒருநாளில் வெடித்துவிடுவதில்லை. அது வெடிப்பதற்குத் தேவையான கருமருந்து நீண்டகாலமாக மக்களின் மனதில் கொட்டிவவைக்கப்படுகிறது. திரிமூட்டும் தேதிதான் முன்பின்னாகிறது. இஸ்லாமியர் மீது துவேஷம் வளர்க்கும் உள்ளடக்கம் கொண்ட 40 வகையான அவதூறுகளை இந்துத்துவாவினர் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் அதனடிப்படையிலான முன்னனுமானங்களை உருவாக்கிக் கொள்கிறவர்கள் பெருமளவில் கலவரங்களில் பங்கேற்பதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த அணிதிரட்டலின் நுட்பத்தை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆனால் வாழிடம், தொழில், வியாபாரம், கல்வி என்று பல்வேறு தளங்களில் இஸ்லாமியரோடு இணைக்கமுடன் நெருங்கி வாழ்ந்துவருகிற இந்துக்களின் மனதிலும்கூட இந்துத்வாவினர் எப்படி நஞ்சு பாய்ச்சுகிறார்கள் என்பதை நாம் இன்னும் கண்டறியவில்லை என்றே தோன்றுகிறது. உற்றாரும் உறவாருமாய் இருந்தவர்களே தங்கள்மீது வெறுப்பைக் கக்கும்போது அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வாய்விட்டு அரற்றுகின்றனர் ஃபிர்தவுசின் கதைமாந்தர்கள்.

வாக்காளர் பட்டியல், டெலிபோன் டைரக்டரி, பொதுவிநியோகக் கடைகளின் பதிவேடு போன்ற ஆவணங்களின் துணையோடு அந்தந்த பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களின் பட்டியலைத் தயாரித்து அவர்கள் மீது தனது கொலைப்பட்டாளங்களை ஏவிவிடும் உத்தியை இந்து பயங்கரவாதிகள் கையாள்கின்றனர். தனிநபர் மோதல்களுக்கு மதச்சாயம் பூசி மதக்கலவரங்களைத் தூண்டுவதும் மதக்கலவரங்களைப் பயன்படுத்திக் கொண்டு தனிநபர்கள் தம் பகைகளை கணக்குத் தீர்த்துக்கொள்வதும் இதற்குள் அடக்கம். கலவரங்களுக்கூடாக நுழையும் காவல்துறை இந்துத்துவாவின் சீருடைப் போர்த்திய அடியாட்களாக செயல்படுவதை அம்பலப்படுத்துகிறார் ஃபிர்தவுஸ்.

இயல்பிலேயே மனிதவுரிமைகளை மதிக்கும் பண்பில்லாத காவல் துறையினரின் மனவியல்பே தலித்துகளுக்கும் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான வன்மம் கொண்டதாகத்தான் தகவமைக்கப்படுகிறது. எனவே சாதி அல்லது மதக்கலவரங்களில் அவர்கள் ஒருபக்கச்சாய்வுடன்/ ஒரு தரப்பாகவே மாறிவிடுகின்றனர். அகமதாபாத் (1969), பிவாண்டி- ஜல்கான்- மகத் (1970), தலிச்சேரி (1971), தில்லி (1984), மும்பை (1992-93) மதக்கலவரங்கள் மீதான விசாரணைக்குழுக்கள் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துச் சுட்டுமளவுக்கு அவப்பெயர் ஈட்டியவர்கள் அங்குள்ள காவல்துறையினர். கோவை மாநகர காவல்துறையும் இதற்கு விதிவிலக்கானதல்ல என்பதை கொடிய சித்திரவதைகளாலும் பேரிழப்புகளாலும் அறிந்துவைத்துள்ள இஸ்லாமியர்களின் குரல் இத்தொகுப்பு முழுவதிலும் துயரார்ந்த விசும்பலைப்போல் எழும்பியும் அடங்கியும் நம்மை நிம்மதியிழக்கச் செய்கிறது. ‘அடிபடுபவனின் குரல்’ கதையில் வரும் முஸ்தபா கமால் பாட்சா என்ற எழுத்தாளனை கைதுசெய்துவிட்டு ‘‘தேடப்பட்டு வந்த முக்கியத் தீவிரவாதி கைது- திடுக்கிடும் மர்மங்கள்...’’ என்று வெளியாகும் அறிக்கையை வாசிக்கிற போது குஜராத்திலும் காஷ்மீரிலும் நாடெங்கிலும் நடைபெற்றுவரும் என்கவுண்டர்கள் பற்றிய கட்டுக்கதைகள் அம்பலமாகின்றன.

நடைபாதை வியாபாரத்திற்கு செல்கிறவனையும், திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருகிறவனையும் தேநீர்க்கடையில் உரையாடிக்கொண்டிருக்கும் நண்பர்களையும் அவர்கள் இஸ்லாமியர் என்பதற்காகவே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி சிறையிலடைத்து விடும் கொடுமையை நிறுத்தும்படி காவல்துறையை உலுக்கியெடுக்கும் படியான போராட்டங்கள் எதுவும் இங்கு வெடிக்கவில்லை. எனவே ஜனவரி-26, ஆகஸ்டு 15, டிசம்பர் -6 போன்ற நாட்கள் வெளிப்படையாக இஸ்லாமியர்களை வேட்டையாடும் நாட்களாக மாறியுள்ளன. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தொழில் வணிக நடவடிக்கைகளிலும் இஸ்லாமியருக்குரிய பங்கை வழங்க மறுக்கிற அரசாங்கம் இந்தியாவின் சிறைகளை மட்டும் இஸ்லாமியரைக் கொண்டு நிரப்பிவருகிறது. திரும்ப வரவே வராத அவர்களது காலத்தை அது பறித்துக்கொள்கிறது.

வாழ்வதற்கான அரியதருணங்களை இளையபருவத்தை இஸ்லாமிய இளைஞர்கள் சிறைகளில் தொலைக்கிற அவலத்திற்கு யார் பொறுப்பேற்பது? ஒரு குற்றமும் இழைக்காதவர்களை ஆண்டுக்கணக்கில் அடைத்துவைத்து விடுவிக்கிறபோது இந்தச் சமூகத்திற்குள் பொருந்த முடியாமல் அவர்கள் பின்தங்கிப்போகிறார்கள். ஆளுமைச்சிதைவு கண்ட இவர்கள் இந்த உலகம் தங்களை விட்டுவிட்டு முன்னே போய்க் கொண்டிருப்பதாக மனச்சோர்வு கொள்கின்றனர். முன்புபோல குடும்பத்தாரோடு இயல்பாக கலந்து பழக முடியாமல் தம்மைத்தாமே தனிமைப்படுத்திக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகின்றனர். சிறையில் நடந்த சித்திரவதைகள் குறித்து ஆழ்மனதில் தங்கியுள்ள அச்சம் அவர்களை நிம்மதியிழக்க வைக்கிறது. ஒரு சராசரி மனிதர்களுக்குரிய எல்லா வாய்ப்புகளையும் அவர்கள் இழந்து தவிக்கின்றனர். எந்தக் களிம்பினாலும் ஆற்றமுடியாத காயங்கள் அவர்களது உடம்பிலும் மனதிலும்.

‘‘... நான் அந்த நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்களின் இழப்பு 200 கோடியைத் தாண்டும். இதனை இந்து-முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல்துறையின் கைங்கரியத்தினால் நடந்தது. இதன் காரணமாகத் தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது’’ என்று மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் 8.1.98 டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் எழுதியிருந்ததை இவ்விடத்தில் இணைத்துப்பார்த்தால் தடாவிலும் பொடாவிலும் இஸ்லாமிய இளைஞர்கள் சிக்கவைக்கப்பட்டதன் பின்னேயுள்ள இந்துப்போலிஸ் மனநிலையை விளங்கிக்கொள்ள முடியும். ஆம், அவர்கள் குற்றவாளிகளை தப்புவிக்கிறார்கள், பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கிறார்கள்.

மதச்சார்பற்ற அரசு என்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் சட்டத்தின் கீழ் இயங்குவதாக பீற்றிக்கொள்கிற இந்த நாட்டின் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல்நிலையங்கள் அவ்வளவும் இந்துப் பெரும்பான்மைவாதம் என்கிற பேரழிவு நோயால் பீடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நாத்திகர்கள் மற்றும் சிறுபான்மை மதத்தவரின் நம்பிக்கைகளும் உணர்வுகளும் கிஞ்சித்தும் மதிக்கப்படாத இடங்களாக அவை உள்ளன. பெரியாரின் வழிவந்ததாய் புருடா விடுகிற பகுத்தறிவுக்கொழுந்துகளின் ஆட்சியில் சாமிப்படங்கள், பூஜைகள், பக்திப்பாடல்கள் என்று இந்துமதச் சடங்குகள் நடக்காத அலுவலகம் ஒன்றையும் நம்மால் காணமுடியவில்லை. இந்து என்கிற தனது மனநிலையைக் கடந்து ஒரு பொதுமனிதராக பணியாற்றுவதற்கான சட்டப்பூர்வ நெருக்கடி எதுவும் இல்லாததால் பெரும்பாலான அரசுஊழியர்கள் அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலைக்கு லகுவில் தாவுகிறார்கள். அவர்களது பொதுப்புத்தியில் தொழிற்சங்கங்கள்கூட தலையிடுவதில்லை. குற்றமும் தண்டனையும் கதையில் வருகின்ற சாகுலைப் போன்ற யாராவதொரு இஸ்லாமியர் கண்ணும் காதுமற்ற அவர்களிடம் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் நெடுங்காலமாய்.

3.

ஆயிற்று, காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு பாப்ரி மசூதியை இடித்து 18 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ‘‘ஹிந்துக்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தி மாற்றார்கள் எங்கெல்லாம் நமது திருக்கோயில்களை அழித்து தங்கள் வழிபாட்டுஸ்தலங்களை உருவாக்கியுள்ளார்களோ, அவற்றை இடித்து மீண்டும் திருக்கோயில்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் ஹிந்துக்களின் நிலைப்பாடு. இது எப்போது சாத்தியம்? ஹிந்துக்கள் அரசியல் பலம் பெறும்போது சாத்தியமாகும். ஆக்கிரமிப்பு மனோபாவம் ஹிந்துக்கள் மனதில் அதிகரிக்கும்போது இது நடக்கும். எனவே நாம் செய்ய வேண்டியது எல்லாம் Aggressive Hind எண்ணிக்கையை அதிகப்படுத்துவது ஒன்றுதான்...’’ ( ஸ்ரீராம ஜன்மபூமி போராட்ட வரலாறு, ஆர்.பி.வி.எஸ் மணியன்- பக்.13) என்கிற விசுவ ஹிந்து பரிசத்தின் உத்தி, இன்னொருவருக்குச் சொந்தமான இடத்திற்கு சட்ட விரோதமாக உரிமை கோருவது- சர்ச்சைக்குரியதாக மாற்றுவது- பிறகு அடியாட்களின் வன்முறையால் அபகரித்துக்கொள்வது என்கிற கட்டப் பஞ்சாயத்து தாதாக்களின் உத்திதான். அவர்களது இவ்வகையான ஆக்கிரமிப்புகளுக்கு சட்டப்பூர்வ ஒப்புதல்போல அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பும் அமைந்துவிட்டிருக்கிறது. எனவே இந்தியாவில் எந்த இடம்தான் இந்துவுக்கு சொந்தமில்லை? என்று அவர்கள் இஸ்லாமியர்களின் ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்தின்மீதும் உரிமை கோருகிறார்கள். இதோ மசூதி இடிக்கப்பட்ட நாளான இன்று விசுவ இந்தப் பரிஷத் ஒட்டியிருக்கும் சுவரொட்டி ‘‘பாக்கி இருக்கு பாக்கி இருக்கு, காசி மதுராவில் பாக்கி இருக்கு ... ’’ என்று கொக்கரிக்கிறது.

தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தை பதற்றத்தில் மூழ்கடித்துக் கொல்வதற்கும், சமூகத்தை என்றென்றும் இணக்கம் காணமுடியாப் பகைமைக்குள் வீழ்த்தவதுமான இந்து பயங்கரவாதிகளின் கொடுஞ்செயல்களுக்கு எதிராக என்னதான் செய்யப்போகிறாய் என்ற கேள்வியை நம் ஒவ்வொருவர் முன்னும் எழுப்புகிறார் ஃபிர்தவுஸ். அது, இஸ்லாமியருக்கு கருணை காட்டுங்கள் என்ற இரைஞ்சுதல் அல்ல. ஒரு நாகரீக சமூகத்தின் அங்கத்தவர் என்ற முறையில் உனது சகமனிதனை நீ எவ்வாறு நடத்தப்போகிறாய் என்ற அறச்சீற்றத்தின் குரல். ‘‘மனிதனை மனிதனாகக் கண்டால் அவனுடனான உறவை மனித உறவாகவே கொள்ள முடியும். அப்போது அன்பிற்கு அன்பையும் நம்பிக்கைக்கு நம்பிக்கையையும் மட்டுமே பரிமாறிக் கொள்ள முடியும்...’’ என்கிறார் மார்க்ஸ். என்ன செய்யப்போகிறீர் என்னருமை வாசகர்களே?

- ஃபிர்தோஸின் இந்தத் தொகுப்பு இவ்வளவு காலம் கடந்து வருகிறதே என்ற ஆதங்கத்துடன்

ஆதவன் தீட்சண்யா,
அம்பேத்கர் நினைவுதினம்/ இஸ்லாமியரின் கறுப்பு தினம்/ 06.12.10